மூட்டை கட்டிக்
கொண்டிருக்கிறது
உலகம்.
பைத்தியக்காரன்
ஏதாவதொரு மூட்டையை
எப்போதும்
அவிழ்த்து வைத்து
அழகு பார்க்கிறான்.
தேடுகிறான்,
தொலைந்ததை
மீட்டெடுத்ததாய்
மீள் மகிழ்ச்சியும்,
மீட்டெடுத்ததை
தொலைத்ததாய்
அதி துக்கமும்
கொள்கிறான்.
என்னிடமான
மூட்டைகளை
நாளைக்கேனும்
அவிழ்க்க வேண்டும்.
ஒவ்வொருவருக்குமான
ஒரு மூட்டை
என்னிடமிருக்கிறது.
உனக்கான மூட்டையில்
உன்னை வரித்த
சுவடியை
மீட்டெடுத்து
வாசிக்கிறேன்.
ஆயிரமாயிரம் முறை
எரித்துவிட்டு
இருக்கிறேன்.
பிறகு
சாம்பலில் இருந்தும்
சேர்த்தெடுக்கும்
சாகசந்தானே
பைத்தியக்காரத்தனம்

No comments:
Post a Comment