Wednesday, June 23, 2021

மயிலே மயிலே

மயிலே மயிலே

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படுவார்.

https://youtu.be/qTuzBvAPYa4

நண்பர் அலெக்ஸ் "கடவுள் அமைத்த மேடை " என்ற படத்திலிருந்து மயிலே மயிலே உன் தோகை எங்கே? என்ற வாலிப வாலியின் பாடலுக்கு இசை வள்ளுவன் இளையராஜாவின் இசையை சுட்டி பொருள் விளக்கி ,குரலில் குழைந்த பாலுவையும் நெகிழாத ஜென்சியையும் பாராட்டி இருக்கும் காணொளியை கண்டேன், 
இன்பம் கொண்டேன்.

தயாரிப்பாளரையும் இயக்குநர் முத்துராமனையும் வாரியிருப்பார். கம்ப ராமாயண சிவக்குமாரை வம்புக்கு இழுத்திருப்பார்.

காட்சியமைப்பை லேசாக விளக்கிவிட்டு விலகி இருப்பார். இணைய வழிக் கலவி கற்கும் காலம் இது.மன்னிக்கவும் கலவினா சொன்னேன் கல்வி,கல்வி.

திரைப்படம் வந்த எழுபதுகளின் கடைசி வருடங்களில் காதலை,காமத்தை,அன்பை திரைப்படங்களே சொல்லிக் கொடுத்தன.

காமத்தில்தான் புலன்கள் உச்சம் அடைகின்றன. நோக்கலும்,வாய்மொழிதலும்,தொடுதலும்,நுகர்தலும்,சுவைத்தலும்,மீட்டலில் இசைச் சந்தம் கேட்டலும்,அமுதம் சிந்தியதில் விளைந்த மின்பாய்ந்த ஏகாந்தமும் காமத்தின் கூறுகள்.

இலை மறை காயாக விளக்கியது இலக்கியம்.கனியாக காட்சிப்படுத்தியது திரைப்படங்களே.

இப்பாடலின் காட்சியமைப்பை பார்த்தால் தெரியும் இயக்குநரின் உத்தி.

நேர்த்தியான இசை,காமம் இழையும் பாடல் வரிகள்,பாடல் ஆரம்பித்து விட்டால் இசையின் போக்குக்கு தகுந்தாற்போலதான் காட்சி அமைக்க முடியும். காட்சியை அமைக்கணும் என்றால் இசையின் ஆரம்பத்திலேயே அமைக்க வேண்டிய சூழல். 

புல்லாங்குழல் கேட்கும் அந்த முதல் பத்து பதினைந்து வினாடிகளிலேயே பாடல் வரிகள் ஆரம்பிக்கும் முன்னமேயே 
வாலிப சிவக்குமாரும் 
வாளிப்பான சுமித்ராவும்
வாலியின் வரிகளுக்கு
இசையின் இளமைக்கு
முன்னூட்டமாய் சில்மிஷங்கள்
செய்யும் காட்சியாய் அமைந்திருக்கும்.

அவன் கண் நோக்கும் 
அதை கண்ட அவள்
இரு கண் போக்கும்
மேலாடை தழுவும்
ஒரு கைப் போக்கும்
நீ வா என்று
உதடு குவிக்கும்
அவன் கண் அழைப்பும்
இல்லை என்னை வெட்கம்
பிடுங்கித் தின்கிறதே
ஆசைதான் எனக்கும்
நீயே வந்துவிடேன்
என்ற கண்சம்மதமும்
நிழல்களின் நகர்த்தும்
காதல் குருவிகளின்
 அலகிணைதலும்
இதழ்தான் சேர்ந்ததோ
என் அவள் விலகி ஒடுவதாய்
காட்சி அமைப்பு இருக்கும்.

பாடலின் கருத்தை விட்டு விலகி இருப்பதால் பாடல் வரிகள் ஆரம்பிக்கும் முன்னேயே 
மின்னல் போல் தோன்றி மறைந்திருக்கும் இந்தக் காட்சி அமைப்பு.

மயிலே மயிலேனு பாட்டு ஆரம்பிக்கும்போது இரண்டு மயிலை காண்பித்திருப்பார் இயக்குநர்.

கல் மயில் முதலில் தெரியும்
வெண் மயில் (நாயகி) இரண்டாவது தெரிவார்.

ஒயிலே ஒயிலே என்ற வரிகளில்
நாயகி ஒயிலாக நடந்து காட்டுவார்.
ஊஞ்சல் இங்கே என்ற வரிகளில் ,நான்தான் உன் ஊஞ்சல் என்று அபிநயம் பிடித்திருப்பான் நாயகன்.

குளிர்காலம் அல்லவோ தனிமையில் விடலாமோ இயல்பாய் நடந்து கொண்டே கேள்வி கேட்டவாறே தளிருடல் தொடலாமோ என்று முடிக்கையில் இயல்பாய் நாயகித் தோளைத் தொட மறு கையினால் விலக்கி ஓடுகிறாள் நாயகி.

மயிலே மயிலே என பின் தொடர்கிறான் நாயகன்.

பாடல் வரிகள் ஆரம்பித்த பிறகு இதுவரை ஒத்து போகிறது காட்சியமைப்பு.

நாயகி பாட ஆரம்பிக்கிறாள்
சேர்வது போல் நாயகனைச் சேர்ந்து விலகிப் போகிறாள்

இசை மட்டுமே வரும் இடை வெளியில் நாயகன் நாயகி மையப்படுத்தி காண்பிக்கிறார் இயக்குநர். டண்டான்டண்டான் என்று இசைத் துண்டுமுடியும்போது நாயகியின் நடையழகை காட்டியிருப்பார் முத்துராமன்.

வயலின் இசைமுறுக்கேற்றும் போது பக்கவாட்டிலிருந்து நாயகியின் கண்களை மூடி கழுத்தில் முத்தமிடுவான் நாயகன்.



துள்ளி விலகி ஆசையாகப் பார்த்து தன் இரு கண்களையும் மூடிக் கொண்டே பின்னோக்கி நடந்து கொண்டே என்ன பண்ணிட்ட?இன்னும் இன்னும் என்று உணர்வு தெரியும் வண்ணம் உணர்வு காட்டி இருப்பாள் நாயகி.

இசைத் துண்டுகளில் எல்லாம் பாடல் வரிகள் இல்லாதிருக்கும்.காட்சியமைப்பு கருத்தை விலகி நிற்கும். 


தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க என்ற வரிகளில் இயக்குநர் இளமையாய் யோசித்திருப்பார். கவர்ச்சியான காட்சியமைப்பாக இருக்கும் .‌அந்தக் கால் இளைஞர்களுக்கு கண்களுக்கு விருந்தாய் அமைத்திருப்பார். விரசம் இருக்காது சரசம் இருக்கும்.

இரசித்துக் கொண்டே இருக்கலாம்.
இசையும் அதனுடன் இசையும்
இளமையும் இன்பம் இன்பம்.
மலரினும் மெல்லிது காமம்.
அதைச் சொல்லும் தமிழோ இன்பமோ இன்பம்.




 







No comments:

Post a Comment